articles

img

மாலாவின் மயிலிறகு ஞா.கலையரசி

மாலா மூன்றாம் வகுப்பு மாணவி.

அவள் தோழி வள்ளி. வள்ளி

ஒரு மயில் இறகை, மாலாவுக்குக் கொடுத்தாள்.  

“அதைப் புத்தகத்திற்கு உள்ளே வைத்தால், குட்டி போடும்” என்று, வள்ளி சொன்னாள்.

மாலாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

மாலா அதைத் தமிழ்ப் புத்தகத்துக்கு உள்ளே வைத்தாள். தினமும் அந்தப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள்.

மயில் இறகு, குட்டி போடவில்லை.  

ஒரு வாரம் ஆனது. அப்போதும் அது குட்டி போடவில்லை. மாலாவுக்குக் கவலை. வள்ளியிடம் காரணம் கேட்டாள்.  

“அதுக்குத் தீனி வைக்கணும். பென்சிலைச் சீவி, அந்தத் தூளை வை.

அதைத் தின்னுட்டுத் தான், மயில் இறகு குட்டி போடும்” என்றாள் வள்ளி.    

மாலா உடனே பென்சிலை எடுத்துச் சீவு சீவு என்று சீவினாள். முழு பென்சில் பாதி ஆனது. அந்தத் தூளை எடுத்து, மயில் இறகுக்குத் தீனி வைத்தாள்.

 ‘ஒரு வாரம் தீனி வைக்காமல், மயில் இறகைப் பட்டினி போட்டு விட்டேனே!’ என அவள் வருந்தினாள்.  

அதற்குப் பிறகு மாலா, தினமும் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள். மயில் இறகு குட்டி போடவில்லை. மீண்டும் வள்ளியிடம் சொன்னாள்.

 “தினமும் தொறந்து பார்த்துக்கிட்டே இருந்தா, அது குட்டி போடாது. ஒரு வாரம் கழிச்சித் தொறந்து பாரு” என்றாள் வள்ளி.

‘தினமும் தொறந்து பார்த்தால், அதுக்குத் தொல்லையா இருக்கும்ல?

வள்ளி சொன்னது சரி தான்’ என்று மாலா நினைத்தாள். அவள் ஒரு வாரம் கழித்துத் திறந்து பார்த்தாள். அப்போதும்,

அது குட்டி போடவில்லை. மயிலிறகு குட்டி போட்டதாகச் சொன்ன, மற்ற தோழிகளிடம் மாலா கேட்டாள்.

 “பென்சிலைச் சீவி வைக்கக் கூடாது. அதான் குட்டி போடல; அதுக்கு அரிசி வைக்கணும்” என்று சிலர் சொன்னார்கள்.  

“கொஞ்சம் அரிசி வேணும் அம்மா; அப்ப தான் என் மயில் இறகு குட்டி போடுமாம்” என்று மாலா,

அம்மாவிடம் சொன்னாள்.  அம்மா சிரித்துக் கொண்டே, கொஞ்சம் அரிசி கொடுத்தார்.

ஒரு வாரம் ஆனது. அப்போதும் அது குட்டி போடவில்லை. “அதுக்கு அரிசி வைக்க கூடாது. தென்னை மரத்துப் பச்சை மட்டையோட அடியைக் கீறி வைக்கணும்; அப்ப தான் குட்டி போடும்” என்றாள் மீனா. “அது எங்க கிடைக்கும்?” என்று மாலா, கவலையுடன் கேட்டாள்.

 “கவலைப்படாதே. நான் கொண்டு வரேன். எங்க கொல்லையில தென்னை மரம் இருக்கு” என்றாள் மீனா. மறுநாள் மீனா அந்தத் தீனியைக் கொண்டு வந்து,

கொடுத்தாள். அதற்கு நன்றியாக, மாலா அவளுக்கு இரண்டு தேன் மிட்டாய் கொடுத்தாள்.

ஒரு வாரம் ஆனது. அப்போதும், அது குட்டி போடவில்லை.

மாலாவுக்கு எந்நேரமும் அதே கவலை. அதைப் பற்றியே, அம்மாவிடம் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

அன்று இரவு மாலா சீக்கிரம் தூங்கி விட்டாள். அம்மா தமிழ்ப் புத்தகத்தைத் திறந்து பார்த்தார்.  

மறுநாள் காலை மாலா, புத்தகத்தைத் திறந்தாள். என்ன ஆச்சரியம்! மயில் இறகு, ஒரு குட்டி போட்டு இருந்தது.  

மயில் இறகுக்குப் பக்கத்தில், குட்டியாக ஒரு இறகுத் துண்டு இருந்தது! அதைப் பார்த்த மாலா, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.  

மாலா எல்லோரிடமும் அந்த மயில் இறகு குட்டியைக் காட்டிக் காட்டி மகிழ்ந்தாள்.